views
சிறுநீரக நலம் மற்றும் நோய்கள் - சிறுநீரகங்கள் செயலிழந்தால் என்ன செய்யலாம்?
நம் உடலில் இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. அவை விலா எலும்புகளுக்கு கீழே வயிற்றின் மேல்பகுதியில் பாதுகாப்பாக அமைந்துள்ளன. சிறுநீரகங்கள் உடலின் கழிவுகளை வெளியேற்றும் முக்கிய பணியைச் செய்கின்றன. அதோடு, உடலின் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதும், ரத்தத்தில் உள்ள நீர், உப்பு மற்றும் பல்வேறு தாது பொருட்களின் அளவை சமநிலையில் வைத்திருப்பதும் சிறுநீரகங்களின் முக்கிய வேலைகளாகும். மேலும், சிறுநீரகங்கள் ரத்த உற்பத்திக்கும், எலும்புகள் திடமாக இருப்பதற்கும் தேவையான ஹார்மோன்களையும் உற்பத்தி செய்கின்றன.
சிறுநீரகங்களில் இரண்டு விதமான நோய்கள் ஏற்படலாம். முதலாவது, அதன் செயல்பாடு குறைவது – இதை நாம் சிறுநீரகங்களின் செயலிழப்பு (கிட்னி ஃபெயிலியர்) என்கிறோம். இரண்டாவது, அதன் வடிவமைப்பில் ஏற்படக்கூடிய நோய்கள் – இதில் கற்கள், கட்டிகள், சீழ் பிடித்தல் போன்ற நோய்கள் அடங்கும்.
சிறுநீரகங்கள் செயலிழப்பதற்கு முக்கிய காரணங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் (நீரிழிவு) ஆகும். அதுதவிர தேவையில்லாமல் மருந்துகள் உட்கொள்வது, குறிப்பாக வலி நிவாரண மாத்திரைகள் (NSAIDs) நீண்ட காலம் உட்கொள்வதும் ஒரு முக்கிய காரணமாகும். இவை தவிர சிறுநீரகங்களில் தானாக வரக்கூடிய க்ளோமெருலோநெஃப்ரைட்டிஸ், சிறுநீரகக் கற்கள், தொற்றுநோய்கள் போன்றவையும் காரணங்களாக அமைகின்றன.
சிறுநீரகங்களின் நாள்பட்ட செயலிழப்பு ஐந்து நிலைகளாக பிரிக்கப்படுகிறது. ஆரம்ப நிலைகளில் (நிலை 1 மற்றும் 2) கண்டறியப்பட்டால், சரி செய்யும் வாய்ப்பு அதிகம் உள்ளது. நிலை 3 தாண்டி கண்டறியப்பட்டால், அதை முழுமையாக சரி செய்ய முடியாது. ஆனால், மேலும் சிதைவடைவதை நிதானப்படுத்தவும் தடுக்கவும் முடியும். சில நேரங்களில் சிறுநீரகங்கள் நோய்த் தொற்று அல்லது நச்சு மருந்துகளினால் திடீரென்று செயலிழக்கும் (அக்யூட் கிட்னி இன்ஜூரி). இது போன்ற நிலைகளில் சரியான சிகிச்சை மூலம் பெரும்பாலும் சிறுநீரகங்களின் செயல்பாட்டை மீட்டெடுக்க முடியும்.
இதில் முக்கியமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, ஆரம்ப நிலைகளில் பெரிதாக அறிகுறிகள் வெளிப்படுவதில்லை. இதனால்தான் சிறுநீரக நோய் ‘அமைதியான கொலைகாரன்’ என்று அழைக்கப்படுகிறது.
ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மூலம் சிறுநீரகங்களின் செயல்பாட்டைத் தெரிந்து கொள்ளலாம். ரத்தப் பரிசோதனையில் கிரியாட்டினின், யூரியா, எலெக்ட்ரோலைட்ஸ் மற்றும் eGFR (மதிப்பிடப்பட்ட குளோமெருலார் வடிகட்டல் விகிதம்) ஆகியவை சிறுநீரகச் செயல்பாட்டை மதிப்பிடுவதற்கான முக்கிய குறிகாட்டிகளாகும்.
ஆரம்ப நிலையில் அறிகுறிகள் இருப்பதில்லை என்பதால், இந்தப் பரிசோதனைகளை உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் வருடம் ஒரு முறையாவது செய்துகொள்ள வேண்டும். அதுதவிர ஏதேனும் சிறுநீர் தொடர்பான உபாதைகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும்.
சிறுநீரகங்கள் முழுமையாகச் செயலிழந்தால் – அதாவது ஐந்தாம் நிலைக்கு வந்தால் (இறுதி நிலை சிறுநீரக நோய்), அதற்குப் பின் டையாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இந்த நிலையில் சிறுநீரகங்களால் இயற்கையான சுத்திகரிப்புப் பணியை மேற்கொள்ள முடியாது. ஆனால், செயற்கைச் சுத்திகரிப்பு முறை (டையாலிசிஸ்) மூலம் வெகு காலம் நன்றாக வாழ முடியும்.
டையாலிசிஸ் என்பது ரத்த சுத்திகரிப்பு செய்யும் முறை ஆகும். இதில் ஓர் இயந்திரத்தின் உதவியோடு ரத்தத்தை செயற்கை வடிகட்டி (டையாலைசர்) உள் செலுத்தி, அதிலிருக்கும் யூரியா, கிரியாட்டினின் போன்ற பல கழிவுகளை நீக்குகிறோம். அதே நேரம் உடலுக்கு அவசியம் தேவையான சில தாதுப் பொருட்களை சேர்க்கிறோம்.
டையாலிசிஸ் இரண்டு வகைப்படும்: ஹீமோடையாலிசிஸ் மற்றும் பெரிடோனியல் டையாலிசிஸ். ஹீமோடையாலிசிஸில் ரத்தத்தை நேரடியாகச் சுத்தம் செய்கிறோம். இது பொதுவாக வாரத்துக்கு மூன்று முறை செய்யப்படுகிறது. பெரிடோனியல் டையாலிசிஸில் வயிற்றுப்பகுதியில் உள்ள பெரிடோனியல் சவ்வை பயன்படுத்தி சுத்திகரிப்பு செய்யப்படுகிறது, இது வீட்டிலேயே செய்யக்கூடிய முறை ஆகும்.
டையாலிசிஸ் ஒரு பாதுகாப்பான, பயனுள்ள சிகிச்சை ஆகும். முறையாக டையாலிசிஸ் செய்து கொள்பவர்கள் பல ஆண்டுகள் நன்றாக வாழ முடியும். அவர்கள் அன்றாடப் பணிகளைச் செய்யவும், சமூக வாழ்க்கையில் ஈடுபடவும் முடியும். கவலை வேண்டாம்!
Dr. K. அபிராமி MBBS, MD, DM(Nephro), MRCP (London)
சிறுநீரகவியல் துறைத் தலைவர்
காவேரி மருத்துவமனை, சேலம்
சிறுநீரகங்களின் முக்கிய பணிகள் என்ன?
சிறுநீரகங்கள் ரத்தத்தை சுத்திகரித்து கழிவுகளை நீக்குகின்றன, ரத்த அழுத்தத்தை சீராக்குகின்றன, மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கான ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன.
சிறுநீரக செயலிழப்பின் முதல் அறிகுறிகள் என்ன?
சிறுநீர் குறைவாக வெளியேறுதல், கால்/கை வீக்கம், அதிக சோர்வு, மற்றும் இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஆகியவை சிறுநீரக செயலிழப்பின் ஆரம்ப அறிகுறிகள்.
டையாலிசிஸ் எவ்வளவு காலம் செய்ய வேண்டும்?
இறுதி நிலை சிறுநீரக நோயில், வாழ்நாள் முழுவதும் டையாலிசிஸ் தேவைப்படும். ஆனால், தீவிர சிறுநீரக காயம் (Acute Injury) நிலையில் தற்காலிக சிகிச்சை மட்டுமே தேவை.
சிறுநீரக நோயைத் தடுக்க என்ன செய்யலாம்?
உப்பு/சர்க்கரை குறைந்த உணவு, தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடித்தல், உடற்பயிற்சி, மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல் முக்கியம்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு எவரும் தகுதி உள்ளதா?
ஆதாரமான டோனர் (donor) இருந்தால் மட்டுமே சாத்தியம். நோயாளியின் வயது, மற்ற நோய்கள் (எ.கா: இதய நோய்) ஆகியவற்றைப் பொறுத்து மருத்துவர் முடிவு செய்வார்.
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.
Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801


Comments
0 comment